Friday, October 31, 2008

இரண்டு பிளாஷ்பேக்குகள் : பாகம் ஒன்று


பிளாஷ்பேக் ஒன்று:

அப்போது எனக்கு ஒரு 14 வயதிருக்கும். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். எங்களுடைய அன்றாட வாழ்விலிருந்து பிரிக்கவே முடியாத ஒரு இடமாக ரயில்வே ஸ்டேஷன் இருந்த காலம் அது. ஒரு நாளில் ஒரு முறையாவது ஸ்டேஷனுக்கு போகாமல் அந்த நாளின் இரவு வந்ததே இல்லை. சிகரெட் என்னுடைய உதடுகளின் ஸ்பரிசம் உணர்ந்ததும், பியரின் வாசத்தை என் நாசிகள் அறிந்ததும் இந்த ரயில்வே ஸ்டேஷனில்தான்.

பொதுவாக எங்களுக்கு அந்த இடம் வீட்டில் இருந்து தப்பிக்க ஒரு வசதியான காரணமாகவே முதலில் இருந்தது. படிக்கச்செல்வதாக கதை சொல்லிவிட்டு இங்கே ஓடி வந்து விடுவோம். என் நண்பர்களில் ஒருவனின் தந்தை ரயில்வேயில் வேலை பார்த்ததும் இன்னொரு முக்கியமான காரணம். எதாவது பிரச்சனை என்றால் உதவி கிடைக்கும் இல்லையா.


அப்படி தான் ஒரு நாள் பள்ளிகூடத்திலிருந்தே திட்டம் எல்லாம் பக்காவாக போடப்பட்டு மாலை சரியாக ஆறு மணிக்கு இரண்டாவது பிளாட்பார்மில் சந்திப்பதாக நண்பர் குழாமில் முடிவு ஆகியது. (எங்கள் ஊரின் ஸ்டேஷனில் மொத்தமே இரண்டு பிளாட்பாரம் தான் என்பது வேறு விஷயம்).


அன்றைக்கு பார்த்து எனது நாசமாய்ப் போன BSA SLR சைக்கிள் பங்ச்சர். அதற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீட்டிங்கை புறக்கணிக்க முடியுமா? எடுத்தேன் என் அப்பாவின் ராலே சைக்கிளை. கிளம்பினேன் புயல் வேகத்தில்.... (30 வருஷம் பழைய சைக்கிள் அது... எதாவது சின்ன டேமேஜ் என்றாலும் அடி பழுத்துவிடும்.. இருந்தாலும் நட்புக்கு முன் அதெல்லாம் தூசி ஆனது).


சரியாக 6 மணிக்கு நான் மட்டும் ஸ்டேஷனில். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். எந்த ஒரு முன்திட்டமிடப்பட்ட விஷயம் ஆனாலும் பேசியபடி நேரத்துக்கு சென்று சேருவது. (இப்போது என் மனைவியிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன்).


பிளாட்பாரம் முழுதும் காலியாக இருந்தது. பார்த்தவுடன் ஒரு குஷி. பரங்கி மலை ஜோதியில் முதல் டிக்கட் எடுத்து முதலில் உள்ளே சென்றது போல ஒரு குறுகுறுப்பு. பிளாட்பார்மில் எந்த வாகனத்தையும் ஓட்டக் கூடாது என்று தெரிந்தும் கிளப்பினேன் என் ராலேவை. சரியாக போலீஸ்காரனின் அருகில் சென்று நின்று போனது அந்த இரு சக்கர மூதேவி.


சைக்கிளை தனியாகவும் என்னைத் தனியாகவும் பிரிக்கும் போதே எனக்கு தெரிந்து விட்டது, இது பாகிஸ்தானின் சதி என்று. இருந்தும் மௌனம் காத்தேன். என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.


என் அப்பாவின் ராலே சைக்கிள், திருட்டு போய் பிடிபட்ட மற்ற சைக்கிள்களுடன் நிறுத்தப்பட்டது. நான் ஒரு ஓரமாக ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் பெஞ்சில். தடக் தடக் என்று நெஞ்சு அடித்துக்கொள்ளும் ஓசை எனக்கே கேட்கிறது. இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இறுக்கத்துடன் நான். போலீஸ்காரர்கள் பக்கத்தில் ஒருவனை போட்டு அடி பின்னி எடுக்கிறார்கள். வலி தாங்க முடியாமல் அவன் கதறும் ஒலி அடி வயிற்றை பிசைவதாக இருக்கிறது. அப்படியும் மிராசுதார் முகபாவத்தில் நான்.

இன்ஸ்பெக்டர் என்னை அழைத்ததும் ஜட்டியிலேயே ஒன்னுக்கு போயி விடும் உணர்வு ஏற்பட்டாலும், அதை அடக்கி அருகில் சென்றேன். "என்னடா, திமிரா? துரை, வெளில சைக்கிள பார்க் பண்ண மாட்டிங்களோ" என்றார். ஒன்றும் சொல்லத் தோணாமல் அமைதியாய் திரு திருவென விழித்த போது அவருக்கு பின்னால், எதிரே வாசலில் நண்பன். கைவிரலை கண்ணில் வைத்து எதோ சைகை காட்டுகிறான். முதலில் புரியவில்லை. நன்கு உத்து பார்த்ததும் புரிந்தது. "அழு... அழு.... அழுடா... கூ...." என்கிறான். ம்ஹூம்... எவ்வளவு முயற்சித்தும் எனக்கு அழுகை வரவில்லை.

கடைசியில் வெள்ளை பேப்பரில் கை எழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்கள். அதிகம் கெஞ்ச விடாமல், இரண்டு மணிநேரத்திலேயே சைக்கிளையும் திருப்பி கொடுத்து விட்டார்கள். இந்த வெள்ளை பேப்பர் மேட்டர் என்னை பல நாட்கள் தூங்க விடாமல் பண்ணியது ஒரு தனிக்கதை. எதாவது ஒரு கொலை கேசில் யாரும் மாட்டாவிட்டால், வெள்ளை பேப்பரில் கை எழுத்து போட்டு கொடுத்த என் போன்ற பாவாத்மாக்களை பிடித்துச் சென்று விடுவார்கள் என பரவலாய் நான் கேள்விப் பட்டிருந்தது தான் காரணம்.

இச்சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரம் கழித்து அதே இன்ஸ்பெக்டரை நான் சந்தித்தது மார்க்கெட்டில். என்னுடன் என் அப்பாவும். ஸ்டேஷனில் விதைகளை நசுக்கும் ஒலி எனக்கு அப்போதே மானசீகமாக கேட்டது. அதற்கு பின்பு நடந்து தான் கிளைமாக்ஸ். அவர் என் அப்பாவிடம் சொன்னார், "தம்பி உங்க பையன்னு தெரியாது சார், இல்லன்னா உடனே விட்டுருப்பேன்"

********************************************************************

9 comments:

Cliffnabird said...

ஓட்டமும் நடையுமாக ஓடி எனக்கு தெரிந்த எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள காவல் நிலையத்தில் பலரால் தேய்த்து வளவலபக்காபட்டஅந்த ஒரு புறம் உயரம் குறைந்த நீள் மேஜையில் அசைந்தால் மேசையின் கால் ட்ட்டக்க ட்ட்டக்க என்று சத்தம் போட்டு விடுமோ என்ற திகிலை முகத்தில் காட்டும் ஒரு ஒல்லிதேக சிறுவனை சந்தித்துவந்தேன்; ஆமாம் அவன் கண்களில் ஈரம் இல்லை நான் பார்த்தேன் (---பிரெண்ட்ஸ் சார்லி ஸ்டைல் இல் படிக்கவும்---) ஆனால்... டிராயர்...
(சரி அதைவிடு நண்பர்களை பார்க்க போகும் அவசரத்தில் காய்வதற்குள் போட்டு வந்திருக்கலாம் இல்லையா...??)

நடை அருமை
ரசித்தேன் உண்மை
இன்னும் தீரட்டும் மை!!

- மலைமுகடும் ஒரு பறவையும்

Cliffnabird said...

ஓட்டமும் நடையுமாக ஓடி எனக்கு தெரிந்த எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள காவல் நிலையத்தில் பலரால் தேய்த்து வளவலபக்காபட்டஅந்த ஒரு புறம் உயரம் குறைந்த நீள் மேஜையில் அசைந்தால் மேசையின் கால் ட்ட்டக்க ட்ட்டக்க என்று சத்தம் போட்டு விடுமோ என்ற திகிலை முகத்தில் காட்டும் ஒரு ஒல்லிதேக சிறுவனை சந்தித்துவந்தேன்; ஆமாம் அவன் கண்களில் ஈரம் இல்லை நான் பார்த்தேன் (---பிரெண்ட்ஸ் சார்லி ஸ்டைல் இல் படிக்கவும்---) ஆனால்... டிராயர்...
(சரி அதைவிடு நண்பர்களை பார்க்க போகும் அவசரத்தில் காய்வதற்குள் போட்டு வந்திருக்கலாம் இல்லையா...??)

நடை அருமை
ரசித்தேன் உண்மை
இன்னும் தீரட்டும் மை!!

- மலைமுகடும் ஒரு பறவையும்

Cliffnabird said...

SPEED UP!! put part-2

வணங்காமுடி...! said...

திரு.மலையுச்சி ஏறி அவர்களே , உற்சாகப்படுத்துவதற்கும் தொடர்ந்து படித்து வருவதற்கும் நன்றி. பாகம் இரண்டு வெகு விரைவில்....

Unknown said...

oru pakka kumudham kathai padichathu pola irukku. nice.

வணங்காமுடி...! said...

thanks Bala, Your blog is very nice... keep posting....

Cliffnabird said...

"பிளாஷ் பாக் பாகம் இரண்டின் தாமதத்திற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதி மன்றம் வணங்காமுடிக்கு நோட்டீஸ்ச்"

விளம்பர இடைவெளிக்கு பிறகு...

"நேர்மைன என்ன மா.. ஹமாம் டா கண்ணா.................. "

"ட்டுட டன் ட்டுட டன், லிட்டர்கு நாலு சொட்டு... துணிகளை...."

செய்திகள் தொடர்கின்றன..

முடிமட்டும் என்று ப்லோக் ஓபன் செய்து, பிளாஷ் பாக் பாகம்-ஒன்று என்ற பதிவை எழுதி, பின் பாகம் இரண்டை உடனடியாக எழுத மறுத்த வணங்காமுடி என்ற பதிவரின் மேல் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரகணக்கான... (நூற்றுகணக்கான...பத்து இருபது.. "வஞ்ச புகழ்ச்சி இல்லை") பொது மக்கள் கோபம் அடைந்துள்ளனர். திரு மலையுச்சி ஏறி தொடுத்த பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதி மன்றம் இரு வார விடுமுறை தினங்களுக்குள் விளக்கமோ/பதிவோ எழுதவேண்டும் என்றும் மறுத்தால், காவல் துறையினரால் பிடித்து பாதிக்கபட்டோர் முன வணங்காமுடி நிறுத்தபடுவார் என்றும எச்சரித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி மேலும் கூறுகையில்.......

butterfly Surya said...

நல்லாயிருக்கு. வாழ்த்துகள்.

மண்குதிரை said...

நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.

என் டி ராஜ்குமாரின் சில கவிதைகள் இந்த ப்ளாக்கில் கிடைக்கிறது http://peddai.blogspot.com/2005/09/blog-post_28.html