Saturday, June 13, 2009

ஆற்றல் அழிவின்மை விதியும், கோர முடிவின் இறுதிக் கணங்களும்



எல்லாத் துவக்கங்களுக்கும் முடிவு என்று ஒன்று கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். பிறக்கும் அத்தனை உயிர்களும் இறந்தே ஆக வேண்டும். இது பிரபஞ்ச விதி. மனித வாழ்வின் முடிவுகள் எப்படி எப்படியோ, வித விதமான புது வழிகளில் வந்தாலும் சில முடிவுகளின் முகம் மிகக் கொடூரமாக அமைந்து விடுகிறது. இனப்போர்களில் கொல்லப் படும் மனிதர்களின் முடிவு, மனிதர்களாலேயே கட்டமைக்கப் படுகிறது. சுனாமி, புயல், வெள்ளம், வெய்யில், பூகம்பம் - இவையெல்லாம் இயற்கை கட்டமைக்கும் முடிவுகளின் முகங்கள். வாகன விபத்து - பல நேரங்களில் மனித அலட்சியத்தாலும், சில நேரங்களில் எதிர் பாராத எந்திரக் கோளாறுகளாலும் நேர்ந்தாலும், மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சிதான் இதன் மூல காரணம் என்பது கண்கூடு.

மேலே நீங்கள் காணும் இரண்டு படங்கள், ஒரு விமானம் வெடித்துச் சிதறுவதற்கு சில வினாடிகள் முன்பு எடுக்கப் பட்டவை. மிக அரிதானவையாக கருதப் படும் இவை அந்த விமானத்தில் பயணம் செய்த Paulo G. Muller என்ற ஒரு நடிகரால் எடுக்கப் பட்டவை. கேமரா முழுமையாகச் சேதம் அடைந்து விட்டாலும், அதில் இருந்த மெமரி கார்ட் சேதம் அடையாமல் இருந்ததால் இந்தப் படங்கள் கிடைத்தன. 35,000 அடி உயரத்தில் தென் அமேரிக்காவில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் எதன் மீது மோதியது என்று யாருக்கும் தெரியவில்லையாம். என்ஜின்கள் இரண்டும் உடனே கழன்று வீசியெறியப் பட்டு விட்டன. அதனால் விமானம் கீழே விழுந்த போது வேகம் குறைந்தாலும், உள்ளே மீதம் இருந்த ஆட்கள் இறப்பது தடுக்க முடியாத ஒன்றாகி விட்டது.

இந்தப் படங்களை பாருங்கள். உள்ளே இருந்த பயணிகளின் இறுதிக் கணங்கள் எப்படி இருந்திருக்கும்? அவர்கள் பார்க்கச் சென்ற தன் குடும்பத்தை அப்போது நினைத்திருப்பார்களா? அல்லது பதட்டத்தில் ஒன்றுமே தோன்றாத வெறுமை நிலை அவர்களை ஆட்கொண்டிருக்குமோ? இப்படிப் பட்ட ஒரு முடிவு, இவர்களுக்கு முன்பே விதிக்கப் பட்டிருந்ததா? (இது போன்ற விபத்துக்களில் மரணம் அடையும் அனைவருக்கும் சேர்த்தே கேட்கிறேன்). திறமையான ஒரு விமானி இருந்திருந்தால் இது தடுக்கப் பட்டிருக்கக் கூடுமோ? டெக்னாலஜிக்கு மனிதம் கொடுக்கும் விலையாகவே இவை போன்ற விபத்துக்கள் எனக்குப் படுகின்றன.

மெயிலில் வந்த இந்தப் புகைப் படங்களில் காணும் ஆட்கள் இப்போது உயிருடன் இல்லை. அல்லது, ஆற்றல் அழிவின்மை விதிப் படி, வேறு ஒரு வடிவத்தில் இன்னும் இருக்கக் கூடும். எது எப்படி இருந்தாலும், இயற்கையான முடிவு தான் எல்லாரும் விரும்புவதாக, ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது...

3 comments:

INFOSHAAN said...

இந்த பிரபஞ்சம் அவிழ்க்கவே முடியாத பல மர்ம முடிச்சுகளை கொண்டுள்ளது .; அடுத்த நொடி என்ன என்பது யாராலும் கிரகிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது ... பிரபஞ்சத்தின் ஆரம்பபுள்ளியை பற்றி பேசவோ நினைக்கவோ ஆரம்பித்தால் வானம் பயம் தரும் ஒன்றாகவே இருக்கிறது.. உங்களுடைய அடுத்த பதிவு,, சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா பற்றி உங்களுடைய அபிப்ராயம் என்ன என்பதாக இருக்க வேண்டும் ..
நீங்கள் கொடுத்த அந்த புக்கை படித்த பிறகு நட்சத்திரங்களை ரசிக்க கூட நான் வானம் பார்ப்பதில்லை .... போன வாரம் கூட நாம் இதைப் பற்றி மணிக்கணக்கில் உரையாடினோம் ... உங்களுடைய இந்த சுவராஸ்யமான பார்வை எல்லாரையும் போய் சேர வேண்டும் என்பதே என் விருப்பம் ...

கடைக்குட்டி said...

ம்ம்ம்...

என்னவோ சொல்றீங்கன்னு புரியுது...

வணங்காமுடி...! said...

நன்றி ஷங்கர்

நன்றி கடைக்குட்டி

\\ கடைக்குட்டி said...
ம்ம்ம்...

என்னவோ சொல்றீங்கன்னு புரியுது...
\\

அப்படின்னா நானும் பெரிய ஆளா ஆயிடலாம்னு சொல்லுங்க.... ஹி ஹி ஹி...