Thursday, June 18, 2009

நான் வாங்கிய புத்தகங்கள்



புத்தகங்களுடனான எனது பரிச்சயம் காமிக்ஸ்களுடன் துவங்கியது. லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலிமாமா எல்லாம் என் அப்பா எனக்கு அறிமுகம் செய்தவை. அதில் வந்த முகமூடி வீரர் மாயாவி, இரும்புக்கை மாயாவி, ஆர்ச்சி, மாடஸ்தி, ஜேம்ஸ் பாண்ட் எல்லாரும், தூங்கும் நேரம் தவிர என்னுடன் கூடவே எந்நேரமும் இருநதார்கள். தூக்கத்தில் கூட கனவாய் வந்தார்கள். மாயாஜாலங்களும், மந்திர தந்திரங்களும், வீர தீர சாகஸங்களும் என் பால்யத்தை நிரப்பியதால் மற்ற சிறுவர்கள் போல கோலி (எங்கள் ஊரில் பளிங்கி என்பார்கள்), பம்பரம் எதுவும் என்னைக் கவர்ந்ததே இல்லை. பிறகு மெதுவாக என் கவனம் குமுதம், ஆனந்த விகடன், கல்கண்டு, மாலைமதி, குங்குமம், என்று திரும்பியது. அதன் பிறகு பாக்கெட் நாவல்கள். என் செலவுக்கென வீட்டில் கொடுக்கும் காசெல்லாம் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் என்றே செலவானது. (வீட்டுக்கு தெரியக் கூடாதென்று படித்து முடித்தவுடன் தூக்கி எறிந்து விடுவேன் - இப்போது நினைத்தால் என் மீது எனக்கே ஆத்திரம் வருகிறது, ஆனால் அப்போது வேறு வழி இல்லை)

ஒரு விடுமுறையில், எங்கள் சித்தி வீட்டுக்கு சென்றிருந்த போது, சித்தப்பாவின் புத்தக அலமாரியைக் குடைந்ததில் சுஜாதாவையும் (கி பி 2000-த்துக்கு அப்பால்) பாலகுமாரனையும் (நாவல் பெயர் நினைவில்லை) கண்டெடுத்தேன். என் வாசிப்பு வயசுக்கு வந்தது அன்று முதல் தான். ஆப்பிரிக்கா வந்தபிறகு, புத்தகங்கள் எனக்கு எட்டாக் கனி ஆகி விட்டன. ஒவ்வொரு முறையும் ஊருக்கு சென்று வரும்போதும், வாங்கி வர நெஞ்சு நிறைய ஆசை இருந்தாலும், மற்ற தேவைகள் அதைச் சுருக்கி விடும். கிட்டத்தட்ட எழு வருடங்கள் கழித்து, புத்தகம் வாங்கும் என் கனவு நினைவாகி இருக்கிறது - இங்கிருந்து ஊருக்கு சென்று வந்த என் தம்பியால். நாற்பது புத்தகங்களின் பட்டியல் கொடுத்தும், இருபத்தி ஆறு மட்டுமே கிடைத்தன. (உனக்கு வாங்கிட்டு வந்து குடுக்கறதே பெரிய விஷயம், இதுல கம்மியா இருக்குன்னு குறை வேறயா?)

சுஜாதா சிறுகதைத் தொகுப்பு - பாகம் ஒன்று & இரண்டு

கனவுத் தொழிற்சாலை - சுஜாதா

21-ம் விளிம்பு - சுஜாதா

கரையெல்லாம் செண்பகப் பூ - சுஜாதா

ராஸலீலா - சாரு நிவேதிதா

வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்

வனவாசம், மனவாசம் - கண்ணதாசன்

உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்

தந்தையும் தனயர்களும் - துர்கனேவ்

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை - ஆதவன் தீட்சண்யா

என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா

ம் - ஷோபா ஷக்தி

ஏழாம் உலகம் - ஜெயமோகன்

யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

இறந்த காலம் பெற்ற உயிர் - சுந்தர ராமசாமி
ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் - பேராசிரியர் டி.வி.ஈச்சரவாரியர் (தமிழில் குளச்சல் மு.யூசுப்)

பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்

அன்னை வயல் - சிங்கிஸ் ஐத்மதேவ்

நீங்களும் முதல்வராகலாம் - ரா.கி.ரங்கராஜன்

3 comments:

Rajesh said...

WHat abt the A books and Mumbai train journey book reading.. 4got??

ராஜு கந்தசாமி said...

நல்ல பதிவு, பொழுது போகாமல் உங்கள் வலைப்பக்கமாக ஒதுங்கினேன், இதுவரை எனக்கு தெரியாத சுந்தரை இந்த வலைப்பக்கம் அறிமுகப்படுத்தியது. காலத்தின் கட்டாயத்தால் பீட்டராக (அதாம்பா இங்கிலீஷ் பீட்டரு) மாறிவிட்ட எனக்கும் எழுதும் ஆசையை தூண்டிவிட்டீர்கள். அதற்க்கு முன்னோட்டம்தான் இந்த பின்னூட்டம்.

ஒரு சிறிய வேண்டுகோள், நம் கல்லூரி வாழ்க்கை முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதன் நினைவாக, 1996 முதல் 1999 வரையிலான பழனியாண்டவர் பாலிடக்னிக்கை சுந்தரின் எழுத்து வழியாக பார்க்க ஆவல். நிறைவேற்றுவீர்கள் என நினைக்கிறேன்.

Earn Staying Home said...

மிகவும் நல்ல பதிவு