மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார் திருகல் தியாகராஜன். என்ன செய்வதென்றே புரியாத நிலை. விஷயம் மட்டும் அப்புக்குட்டிக்குத் தெரிந்தால் அவ்வளவுதான், இத்தனை நாளாய் காப்பாற்றி வைத்திருந்த மானம், மரியாதை அத்தனையும் கப்பலேறிக் காற்றோடு போய் விடும்.
இந்த தீபா சனியன், கட்டிக் கொடுத்த அன்றோடு தொலைந்து போகாமல் பிசாசு மாதிரி வந்து வந்து பிராணனை வாங்கியதால் தான் வந்தது இத்தனை தொல்லையும் என்று நினைத்துக் கொண்டார். அவ தான் ஒண்ணும் புரியாம ஏதோ கேட்டுட்டா, இந்த மூதேவி விசாலத்துக்குமா புத்தி இப்படி போகணும்? இவ சப்போர்ட் பண்ணப் போயிதான் நாம இப்படி செய்ய வேண்டியதா போச்சு...
திடீரென்று எல்லோரும் தன்னையே பார்ப்பது போல ஒரு உணர்வு வந்தது தியாகுவுக்கு. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டார். தனக்குத் தானே பேசிக் கொண்டு தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்ததும், ஒரு மாதிரி ஆகி விட்டது.
திருகல் தியாகராஜன் ஒரு டிபிகல் மிடில் க்ளாஸ் ஆசாமி. முப்பது வயதில் கல்யாணம், கண்ணுக்கு லட்சணமான மனைவி விசாலம். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆசைகள் எல்லாம் ஒரு நாளுக்கு மூன்று, நான்கு முறை கிளர்ந்ததில், சரியாய் பத்தாவது மாதம் தீபா பிறந்து விட்டாள். முதல் குழந்தை பெண் என்பதில் தியாகுவுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். அதன் பிறகு, ஒரு பையன் வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும்..ஒன்றும் நடக்கவில்லை. ஒரே பெண் என்பதால் தீபா, ரொம்பச் செல்லம். இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அவர் கொஞ்சம் கஞ்சம் தான். பையனாய் இருந்திருந்தால், செல்லம் கொஞ்சி இருப்பாரோ என்னவோ.
தியாகுவுக்கு ஒரு எலக்டிரிகல் ஷாப்பில், கல்லாவில் வேலை. அந்தக் கடை முதலாளி அவரின் பால்ய நண்பன் என்பதால் வேலையில் ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை, அதே போல சம்பளமும் அதிகம் இல்லை.
தீபாவுக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை. ஏதாவது விஷயத்தில் ஏமாற்றம் என்றால் உடனே அவளுக்கு தாங்க முடியாமல் தலை வலி வந்து விடும். எங்கெங்கோ போய், என்னென்னவோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. அதனால் முடிந்த வரை அவள் ஆசை எதுவென்றாலும் நிறைவேற்றி வந்தார் திருகல் - உள்ளூர திட்டிக் கொண்டே தான்.
இதற்கிடையில் திருகலின் நண்பர், கடை முதலாளி, மண்டையை போட்டுவிட, அவர் பையன் அப்புக்குட்டி பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டான். வந்ததில் இருந்து ஏகப்பட்ட மாற்றங்கள் செய்து, கடையை விஸ்தரித்து விட்டான். இப்போது வெறும் எலக்டிரிகல் ஷாப் மட்டும் இல்லை, ஒரு ஷோ ரூம் வைத்து - டிவி, மிக்சி, கிரைண்டர் என எல்லாம் விற்பனை செய்தான். அவனுக்கு ஆரம்பம் முதலே திருகல் தியாகராசனைப் பிடிக்காது. அவ்வப்போது வேலையில் திட்டினாலும், புண்ணியவான் வேலையை விட்டு அனுப்பாமல் இருக்கிறான். அதற்கும் வேட்டு வைக்கிற மாதிரி வந்து சேர்ந்தது அந்தப் பிரச்சனை.
கஷ்டப் பட்டு சேர்த்த பணத்தில், காலா காலத்தில் தீபாவுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்தார் - அதற்கே நட்டு கழண்டு விட்டது. இந்த இடத்தில் இவர் மனைவி விசாலத்தை பற்றியும் சொல்ல வேண்டும். பொறுமை என்றால் அப்படி ஒரு பொறுமை மகராசிக்கு. இல்லாவிட்டால், தீபா கல்யாணத்துக்கு என்று, குண்டு மணி குண்டு மணியாக சேர்த்து இருபது பவுன் நகையைப் போட்டிருக்க முடியுமா?
எல்லாம் முடிந்தது, அக்கடாவென்று உட்காரலாம் என்று பார்த்தால் தலை தீபாவளி ரூபத்தில் வந்தது பிரச்சனை. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து சேர்ந்தாள் தீபா. அவள் வீட்டுக்காரன் வேலைக்கு தினமும் பஸ்சில் தான் போகிறானாம். வரும்போது இரவாகி விடுகிறதாம், ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தந்தாலே ஆச்சு என்று ஒற்றைக் காலில் நின்றாள். தியாகராஜனுக்கு வந்த கடுப்பிற்கு அளவில்லை. எனக்கு எந்த நாயும் ஸ்கூட்டர் வாங்கித் தரலை. இத்தனை வருசமா நானும் பஸ்சில் தான் வந்து போயிட்டு இருக்கேன், நல்லா குத்துக் கலாட்டம் தானே இருக்கேன் என்று எகிறினார். அவ்வளவுதான், வந்தது தலை வலி தீபாவுக்கு, தலையைப் பிடித்தபடி அவள் கதறத் தொடங்கியதும், ஓ என்று ஒப்பாரி வைத்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டாள் விசாலம்.
"இந்த வீணாப் போன மனுஷனை நம்பி வந்த எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும், எங்கப்பன் போய் சேர்ந்து வருஷம் எட்டாச்சு. இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு அவப் பேரா, நாயின்னு பேச்சு வாங்கனுமா, அதுவும் இந்த வக்கத்த மனுஷன் வாயில விழணுமா" அலறிய அலறலில் மிரண்டு போய் விட்டார் திருகல். இப்படி ஒரு சிக்கலை எதிர் பார்க்காததால் சற்று நிலை குலைந்து தான் போய் விட்டார். "நான் உங்கப்பனை சொல்லல, வாய மூட்றி முண்டம்" எகிறினார் விசாலத்திடம். இதற்கிடையில் தலை வலி பொறுக்க முடியாமல், தீபா, ஒரு மூலையில் மடங்கி உட்கார்ந்து விட்டாள். பயந்து போன திருகல், வேறு வழி இல்லாமல் வாக்குத் தந்து விட்டார் - ஒரு பைக் வாங்கி தீபாவளி அன்று தந்து விடுவதாக. பிறகு தான் ஓய்ந்தது அந்தப் பொல்லாத தலை வலி.
ஒரு மாதம் முன்பே கடன் வேட்டையைத் துவக்கி விட்டார். அப்போது தான் ஒரு உண்மை திருகலுக்குப் புரிந்தது, தன்னை நம்பி எந்தத் தறுதலையும் ஒரு பைசா கூட கடன் தராது என்பது தான் அந்த உண்மை. அலைந்து அலைந்து பஸ் டிக்கட்டுக்கு காசு அழுதுதான் மிச்சம். ஒன்றும் தேறவில்லை.
விசாலம் ஒரு உருப்படியான யோசனையை சொன்னாள். கட்டி வரும் சீட்டுப் பணத்தை இப்போது எடுத்தால், தள்ளுபடி போக ஒரு நாற்பது ஆயிரம் தேறும். ஆனால் சீட்டுக்காரனிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். வேறு யாரும் எடுக்காமல் இருக்க வேண்டும். சீட்டு போடும் சௌந்திரம் வீட்டுக்கு போகும் போது, ஊரில் உள்ள எல்லா சாமியையும் கும்பிட்டுக் கொண்டே தான் சென்றார். ஆனால் விதி யாரை விட்டது? சீட்டுப் பணம் கிடைத்து விட்டால், தெரு முக்குப் பிள்ளையாருக்கு நூற்றி எட்டு தேங்காய் உடைப்பதாய் வேண்டிக் கொண்டதும் வீணாகி விட்டது, எதிர் வீட்டு முருகேசன் எடுக்கப் போகிறானாம். எவ்வளவு கெஞ்சியும் சௌந்திரம் மசியவில்லை. வேண்டுமானால் முருகேசனிடம் பேசிப் பாருங்கள் என்றாள். "மனுஷன் பேசுவானா அவன் கிட்ட, எவனோ ஒரு களவாணிப் பய அவன் வீட்டுக் கோழிய திருடிட்டுப் போனதுக்கு, எதிர்த்த வீடுன்னு என்னை எப்படிலாம் கேவலமாப் பேசுனான். அவனக் கேக்குறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்" என்றார். அவர் கோலத்தைப் பார்த்து பரிதாபப் பட்டாளோ என்னவோ, சௌந்திரம் கொஞ்சம் இறங்கி வந்தாள். தீபாவளி அன்று மத்தியானம் வருமாறும், தன் சொந்தப் பணத்தைக் கடனாகக் கொடுப்பதாகவும், சொன்னவுடன் தான் அவருக்கு நிம்மதி வந்தது.
வீட்டுக்குப் போனவுடன் தீபா, ஆகாசத்துக்கும், பூமிக்குமாக குதித்தாள். தீபாவளிக்கு ஒரு நாள் முன்னரே பைக் வேண்டுமாம், அப்போது தான் தீபாவளி அன்று காலை அவர்கள் ஜோடியாய் கோயிலுக்கு போக முடியுமாம். "என்ன எழவுடா இது, சை" என்றாகிவிட்டது தியாகராஜனுக்கு. மறுபடியும் அவளுக்கு தலை வலி வருமுன், சரி சரி என்று தலை ஆட்டி விட்டு கடைக்கு வந்து விட்டார்.
இன்னும் இரண்டு நாள் தான் இருந்தது, தீபாவளிக்கு. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவர், கடையில் கல்லாவில் இருந்த பணத்தில் ஒரு நாற்பதாயிரத்தை எடுத்துக் கொண்டு நேரே பைக் ஷோ ரூமுக்குப் போய், ஒரு பைக்கை வாங்கியே விட்டார். பேங்கில் கட்டவேண்டிய பணம். இரண்டு நாள் சமாளித்து விட்டால், பிறகு சௌந்திரம் தரும் பணத்தை கட்டி விடலாம்.
மாப்பிள்ளையை செல்லில் அழைத்தவுடன் வேகமாய் ஷோ ரூம் வந்தவன், "ப்ளு கலரா, சிகப்பு நல்லா இருக்குமே" என்றான். ஓங்கி செவிட்டில் அறையலாமா என்றிருந்தது இவருக்கு. தீபாவின் வாழ்கையை நினைத்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டார்.
முதலாளி அப்புக்குட்டி இரண்டு நாளாய் ஊரில் இல்லை, வருவதற்குள் சமாளித்து விடலாம் என்று நினைத்து தான் பணத்தை எடுத்திருந்தார். அந்தக் கிராதகன் தீபாவளி அன்று காலையே வந்து விட்டான். இவருக்கு பயத்தில் காய்ச்சலே வரும்போல இருந்தது, உடம்பெல்லாம் ஒரே நடுக்கம், படபடப்பு. மத்தியானம் வரை பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டியவர், லன்ச் டைமில் ஒரே ஓட்டமாக ஓடினார் - சௌந்திரம் வீட்டுக்கு. போனவருக்கு அதிர்ச்சி - சௌந்திரம் வீடு பூட்டி இருந்தது. யாரோ ஓங்கி நெஞ்சு மேலேயே மிதிப்பது போல இருந்தது அவருக்கு. அவள் செல்லுக்கு கால் போட்டால், சுவிட்ச் ஆப். அப்படியே எங்காவது ஓடிப் போய் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ளலாமா என்று ஒருக் கணம் நினைத்தவர், பிறகு ஏதோ நினைத்தபடி கடைக்கு சென்றார்.
வாசலிலேயே சிகரெட் பிடித்தபடி டென்ஷனாய் நின்றிருந்தான் அப்புக்குட்டி. சைடு வழியாக உள்ளே போக முயன்றவரை மறித்துக் கேட்டான்.
"எங்க போயிருந்தாப்ல..? சாப்பிட்டு வர இத்தன நேரம்...?"
"அது வந்து.. தம்பி.... " "சரி சரி... உள்ள போங்க, இதோ வர்றேன்...."
தண்ணீரை கடக் கடக்கென்று முழுங்கி, கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டவர் இருக்கையில் அமர்ந்தார். தம் அடித்து விட்டு வந்த அப்புக் குட்டி, அவரை, அவன் ரூமுக்கு அழைத்தான். படபடப்பில் எங்கே மயங்கி விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் மெதுவாக உள்ளே சென்றார் தியாகராஜன். போனதும் கேட்டான்.
"போன வாரக் கலெக்ஷன் பேங்கில சேப்பித்தாச்சு இல்லே?" ............."அது அது...."
"எந்தா, மறந்து போயோ.... வயசான காலத்துல உங்களையும் ஒன்னும் சொல்லாம் பாடில்லா..." சொல்லிக் கொண்டே ஒரு வவுச்சரை நீட்டினான். வாங்கிப் பார்த்தவருக்கு ஒன்றும் புரியவில்லை... "தம்பி.. இது என்னான்னு?"
"எந்தா இது, கண்ணும் தெரியலியா? உங்களுக்கு ஒரு சின்ன பரிசு, நீங்க எங்க கடைல சேந்து இன்னையோட முப்பது வருஷம் ஆயிடுச்சு. வருஷத்துக்கு இரண்டாயிரம்னு கணக்கு பண்ணி, ஒரு அறுபதாயிரம் எழுதிருக்கேன்... தீபாவளி போனஸ்....சந்தோசம் அல்லே..."
"தம்பி.... தம்பி... உங்களுக்கு நான் எப்படி கைம்மாறு.... என்னாலே பேச முடியல..." வார்த்தை தடுமாறி திக்கி திக்கிப் பேசும்போதே, சேல்ஸ் மேன் மணி உலுக்கினான், "என்ன பெருசு, பகல் கனவா, முதலாளி கூப்பிடுறாரு... உள்ள போ..."
கண்டதெல்லாம் வெறும் கனவு என்று நம்பவே முடியவில்லை... இருந்தாலும் கனவு தந்த தைரியத்தில் கொஞ்சம் தெம்பாக உள்ளே போனார். "எந்தா, போன வாரக் கலெக்ஷன் பேங்கில சேப்பித்தாச்சு இல்லே?" ....."தம்பி, அது.. வந்து... இனிமே தான்...."
"வயசானா அறிவு இல்லாமப் போயிருமா? ஒழுங்கா நாளைக்கு காலைல பணத்தைக் கட்டி ரசீதை என் வீட்டுல கொடுத்துட்டு போங்க. இந்த மாதிரி வீணாப் போனதை எல்லாம் என் தலை-ல கட்டிட்டு போனாரு பாரு எங்கப்பா, அவரை சொல்லணும்" எரிந்து விழுந்தான். நல்ல வேளை.... பணத்தைக் கேட்கவில்லை...
வீட்டுக்குப் போகும் போது, வழியெல்லாம் சிந்தனை.. என்ன செய்வது, இன்னும் எட்டு மணி நேரத்தில், பணம் எங்கிருந்து வரும்....யோசித்துக் கொண்டே போனவருக்கு வீட்டு வாசலில் நின்ற பைக்கைப் பார்த்ததும் இரத்தம் கொதித்தது.
உள்ளே போனதும் விசாலம் சிரித்துக் கொண்டே - "இன்னிக்கி கூட கடைக்கு போயி தான் ஆகணுமா? சரி வாங்க, சாப்பிடலாம்" என்றபடியே பையை வாங்கினாள். இருக்கட்டும் இருக்கட்டும் என்றவாறே சோபாவில் உட்கார்ந்து கண்ணை மூடினார். "மாமா..." குரல் கேட்டுக் கண்ணைத் திறந்தவருக்கு எதிரே உட்கார்ந்திருந்தான் அவர் மாப்பிள்ளை மகாலிங்கம். கையில் ஒரு மஞ்சள் பை "இந்தாங்க மாமா" என்று பையைக் கொடுத்தான்.
இது என்ன புதுக் குழப்பம், என்று எண்ணியவாக்கில் திறந்து பார்த்தவருக்கு திகைப்பு - உள்ளே கத்தை கத்தையாய் நோட்டுக் கற்றை.
"இதுல நாற்பதாயிரம் ரூபாய் இருக்கு மாமா, நீங்க பைக் வாங்கிக் கொடுத்த உடனே, சந்தோஷமா இருந்தாலும், அப்புறமா யோசிச்சுப் பார்த்ததும், தப்புன்னு தோணுச்சு. நீங்க கவர்மென்ட் எம்ப்ளாயீ கிடையாது, ரிடயர் ஆனா பென்ஷனும் கிடையாது, உங்களுக்கு தான் இந்தப் பணம் தேவை. எனக்கு இல்ல" என்று சொன்னவனைக் கை எடுத்துக் கும்பிடத் தோன்றியது. கைகளைப் பிடித்துக் கொண்டு, கண்ணில் நீர் கசிந்தார் திருகல் தியாகராஜன்.
அவர் அருமைப் பெண் தீபா அருகில் வந்து, "அப்பா, நீங்க என்னை மன்னிக்கணும், எனக்கு எப்பயுமே, தலை வலி வந்ததே இல்ல, சும்மாக் கேட்டா நீங்க வாங்கித் தர மாட்டீங்கனு அப்படி நடிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் அதுவே பழகிப் போச்சு. இவர் தான் எடுத்துச் சொல்லி எனக்குப் புரிய வச்சார்." என்று காலில் விழுந்தாள்.
அப்புறம் என்ன... ஹேப்பி தீபாவளி தான்...
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
Monday, October 19, 2009
Tuesday, June 16, 2009
உமுஸாஸி அல்லது நிறவெறியின் பசி
ருவாண்டா: - நான்கு காட்சிகள்
காட்சி ஒன்று : ஏப்ரல், 1994
அந்த அடி அவன் தலையில் நச் என்று இறங்கியது. தோட்டத்தில் புற்களை வெட்டப் பயன்படும், நீண்ட கத்தி போன்ற அந்த ஆயுதத்தின் முனை அவன் மண்டையில் சரக்கென்று பதிந்து கொண்டு, அடுத்த வெட்டுக்காக இழுக்கப் படும்போது வர மறுத்தது. வலிந்து இழுத்த போது, கூடவே ரத்தமும் பீய்ச்சி அடித்தது. வெட்டுப் பட்ட இடத்தை ஒரு கையால் அழுத்தி மூடிக் கொண்டு, காயம் பட்ட காலை விந்தி விந்தி உயிர் பிழைக்கும் ஆசையில் அவன் உயிரைக் கொடுத்து ஓடினான்.
காட்சி இரண்டு: மே, 1994
இனப்படுகொலை, அதைத் தொடர்ந்த பதில் தாக்குதல்களால் மிக மோசமாகக் காயம் அடைந்தவர்களுக்கு உதவவும், காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடித்து சேர்த்து வைக்கவும் ஆரம்பிக்கப் பட்டிருந்த முகாம்களில் ஒன்று. தலையில் ஆழமான வெட்டு, கை கால்களில் காயங்கள், வயிற்றில் கத்திக் கீறல்களுடன் அந்த பதினைந்து வயது சிறுவன் படுத்திருந்தான். தன் குடும்பத்தில் இருந்த அனைவரையும் போரில் இழந்து தனியனாய் எஞ்சி இருந்த அவனைச் சுற்றி இருந்த டாக்டர்கள், அவனுக்குப் புரியாத ஆங்கிலத்தில் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
காட்சி மூன்று: ஏதோ ஒரு மாதம், 2004 -
உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் பெருமை மிகுந்த அந்த நாட்டின் சில பிரஜைகள் "பொழப்பு" தேடி மேலாளர்களாய் வேலைக்கு சேர்ந்த நிறுவனம்.
தலையில் பெரிய வெட்டுத் தழும்புடன் இருந்த அந்த ஆப்பிரிக்க இளைஞனுக்கு இருபத்தி ஐந்து வயதிருக்கும். ஓட்டுனர் உடையில் இருந்த அவன் தனது நிறுவனத்தின் மேலாளர் முன் தலை குனிந்து நின்றிருந்தான். அவன் கையில் இருந்த காகிதம், வேலையில் இருந்து அவன் நீக்கப்பட்டதை தெரிவித்தது. செய்த குற்றம் - மூன்று நாட்களாய்த் தொடர்ந்து வேலைக்கு தாமதமாய் வந்தது, மேலாளருக்கு உற்சாக பானம் வாங்கி வர அளித்த பணத்தை தொலைத்து விட்டு வெறுங்கையுடன் வந்து நின்றது, மன்னிப்பு கேட்கச் சொன்ன மேலாளரை நீண்ட நேரம் மௌனமாக வெறித்துப் பார்த்தது இன்ன பிற.....
வேலை இனிமேல் இல்லை என்று உறுதியாய்த் தெரிந்ததும் அவன் அங்கிருந்து அகன்றான். அவன் போனதும், உதவி மேலாளர், மேலாளரிடம் சொன்னார் "இந்தக் கருப்பு நாயிங்களே இப்படித் தான் சார், வேலையோட சீரியஸ்னஸ் தெரியாது, பொறுப்பு கிடையாது, மண்டைல மூளைன்னு ஒரு விஷயம் இவனுங்களுக்கெல்லாம் இல்லைன்னு தான் நினைக்கிறேன், நீங்க எவ்வளவு பாசமா நடத்துனீங்க, உறவைப் பத்திலாம் இந்தப் பண்ணாடைங்களுக்கு எங்க சார் தெரியப் போகுது, பைத்தியக்காரனுங்க....வேலை போச்சுன்னு ஒரு வருத்தம் தெரிஞ்சுதா பாருங்க மூஞ்சில, சாவட்டும் சார் இந்த கருப்பனுங்க"
காட்சி நான்கு: வேலை இழந்து ஒரு வாரம் கழித்து வந்த ஞாயிறு, கல்லறைகளின் அருகே அவன்......
ஒவ்வொரு ஞாயிறும் அவன் வாங்கி வரும் மலர்ச்செண்டு அந்த வாரம் கையில் இல்லை. வேலை இல்லாததால் காசும் இல்லை. பசித்த வயிறு, குளிக்காத உடல், வெறுமை ஏறிய கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர்.....
அவனுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை - பத்து வருடம் முன்பு அவன் தலையில் வாங்கிய அந்த அடி, மூளையின் டெம்போரல் லோப் - ஐ பாதித்ததும் அதன் காரணமாக அவன் இழந்த சில முக்கிய தகுதிகளும்.......
டிஸ்கி:
உமுஸாஸி - ருவாண்டாவின் மொழியில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் "பைத்தியக்காரன்"
Labels:
சிறுகதை
Sunday, June 7, 2009
மசால் வடையும், முதல் கதையும்..... !
அவளா அது? என்னால் நம்பவே முடியவில்லை. கண்கள் இடுங்கி, உடல் இளைத்து, முடி எல்லாம் கொட்டிப் போய்..........
"நரை கூடிக் கிழப் பருவமெய்தி....." மேடையில் பாடி பரிசு வாங்கிய என் ரம்யாவா அவள்? பத்து வருட மண வாழ்க்கை ஒரு அழகியை இப்படியா சீர்குலைத்துவிடும்......................?
யோசித்துக் கொண்டே எதிரே வந்த ஐஸ் வண்டியைக் கவனிக்காமல்...... சட்...... "யோவ், பாத்து போய்யா, கூட்டமாப் பொண்ணுங்களப் பாத்தா உங்களுக்கெல்லாம் கண்ணு தெரியாதில்ல?"
அவனை அலட்சியப் படுத்திவிட்டு அவளை மீண்டும் பார்த்தேன். அட.... இங்கே தானே நின்று கொண்டிருந்தாள்? ஒரு வேளை அது அவள் இல்லையோ? ச்சே, ச்சே.... அது அவள் தான்.... என்ன தான் தோற்றம் மாறிவிட்டாலும் அந்த தெத்துப் பல் அது அவள் தான் என்று காட்டிக் கொடுத்ததே.... எங்கே போயிருப்பாள்.... ம்ஹூம்.....
"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" இடையில் இந்த செல் போன் சனியன் வேறு.... எடுத்தால் மறுமுனையில்..... ஐஸ்வர்யா ராய்..................!!!!"
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்... நெட்டி முறித்து நீண்ட பெருமூச்சை விட்டேன்.... கதை எழுதுவது இவ்வளவு கஷ்டமா.? செந்தில் கணேஷ் சொன்னது சரிதான்..... எனக்கெல்லாம் கதை எழுத வராது போலிருக்கிறது... மூக்கைத் துளைக்கும் வாசனையால் கவரப் பட்டு, கவனம் கலைந்தேன். எதிரே டேபிளின் மேல் சற்று முன் மாதவி வைத்து விட்டு போன மசால் வடை, ஆவி பறக்க சுண்டி இழுத்தது.
கதை எழுதிய பேப்பரை அப்படியே மடித்து வடையை சரியாக நடுவில் வைத்து மறுபடியும் ஒரு மடிப்பில் அப்படியே நசுக்கி, எடுத்து ஒரு விள்ளல் வாயில் போட்டு மென்று கொண்டே ஆவி பறக்கும் காப்பியை உறிஞ்சினேன். கூடவே ஒரு வில்ஸ் பில்டர் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் வீட்டில் சிகரெட் பற்ற வைத்தால் வேறு ஏதாவது பற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் அந்த நினைப்பை உடனே உதறினேன்.
வடை ஆசை முடிந்ததும், கதை ஆசை லேசாகத் தலை தூக்கியது. எழுதிப் பார்க்கலாமா? இது வரை எழுதிய பேப்பரை பார்த்தேன். அடடா, கதை போச்சே....
சரி வேறு ஒரு பேப்பரை எடுப்போம். யோசிக்கும் போதே உள்ளே இருந்து ஒரு குரல்..... "டேய் எவ்வளவு நேரமா கத்துறேன் - பால் வேணும், சக்கரை வேற தீந்து போச்சு, வாங்கிட்டு வானு? என்னடா பண்ணுற?" என் பிரிய சகியின் குரல் தான்... அன்பு மிகுந்தால் "டேய்"...
"அது ஒன்னும் இல்லம்மா, ஒரு கதை எழுதிப் பாக்கலாம்னு......"
"உன்னை நம்பி வந்த என்னோட கதையே இங்க சிரிப்பா சிரிக்குது.. இதுல நீ வேறயா? போடா.... போயி பால வாங்கிட்டு வா... வந்தா மத்தியானம் சாப்பாடு... இல்லன்ன்னா கொலப்பட்டினி போட்டுருவேன்..."
காப்பியை ஒரே உறிஞ்சலில் முடித்துவிட்டு சரேலென்று எழுந்தேன் - வடை மடித்த கதை பேப்பரை கசக்கிக் கொண்டே.....
Labels:
சிறுகதை,
ச்சும்மா டைம் பாஸு....
Tuesday, June 2, 2009
மீரா பவனம் - தொடர்ச்சி

இரண்டாவது ப்ளாஷ்பேக் - மீரா பவனம் -- இப்படித் தான் எல்லாம் துவங்கியது....
தொடர்ச்சி.... கீழே.....
அவளின் வெற்று மார்பில் கை பட்டவுடன் உடல் பதறி சட்டென்று கையை உதறி விலகினேன். பக்கத்தில் பார்த்தால்.........
கணேசன் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டுக் கேட்டான்.
"என்னடா, மல்லிகா அக்கா உன்னைக் கூப்பிட்டிச்சி அப்படின்னு தான் சொன்னேன். அதுக்குள்ளே கனவு சீன் போயிட்டியா?"
"ஓ... அப்ப எல்லாம் என்னோட கற்பனையா...? டேய், சைக்கிள் கேப்புல என்ன என்னவோ நடந்து போச்சுடா....!"
"ஏன்டா நீ திருந்தவே மாட்டியா? என்ன என்னவோ புக் எல்லாம் படிக்கிர, நீ படிக்கறது மட்டும் இல்லாம என்னையும் படிடா படிடா-னு இம்சை பண்ற... எந்தப் பொண்ணை பத்தி பேச்சு எடுத்தாலும் அவ வயசு என்ன நம்ம வயசு என்னன்னு கூட யோசிக்காம கண்ட மாதிரி கனவு எல்லாம் கண்டு, அதை எங்கிட்ட வேற சொல்லி விடியக்காலைல என்னோட டவுசரும் நனையுற மாதிரி பண்ணிர்ற, வேணாண்டா ராசா.... இனிமே உன் கூட காளிதாஸ் வீட்டுக்கு வரவும் வேணாம்... வீட்டுல தேவை இல்லாம திட்டு வாங்கவும் வேணாம். நான் கிளம்புறேன்"
சொல்லிவிட்டு நான் தடுக்கத் தடுக்க நடந்து போய்....யே .... விட்டான். என்னை அறியாமல் எனது வலக்கை, என் இடது தோளில் கிள்ளிப் பார்த்துக் கொண்டது.
"நிசமாவே எல்லாம் கற்பனையா? வெறும் கனவா?... அடடா....."
ஆசையோடு அசை போட்டுக்கொண்டே நடந்தேன் மல்லிகா அக்கா வீட்டை நோக்கி. நான் கற்பனையில் பார்த்த அதே கலர் பாவாடை சட்டையில் இருந்தாள். துணிகளைக் கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள்.
"ஏண்டா, இன்னைக்கி கூப்பிட்டு விட்டா, அய்யா அடுத்த வருஷம் தான் வருவீகளோ...?"
நான் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு... அவளின் சட்டையின் முதல் பட்டன் போடாமல் விட்ட இடைவெளியைப் பார்த்துக் கொண்டே கேட்டேன்....
"பூ பறிக்கவா கூப்பிட்ட?"......
"ஆமா டா, சீக்கிரம் வா... அம்மா வெளில போயிருக்குது.. அது வர்றதுக்குள்ள பூ பறிச்சிட்டு வந்திருவோம், என்ன?"
-----முற்றும்-----
***************************************************************************************************************
Labels:
சிறுகதை
Friday, May 29, 2009
இரண்டு பிளாஷ்பேக்குகள்: பாகம் இரண்டு

நாங்கள் அப்போது பொன்னகரம் - போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருந்தோம். அந்தத் தெருவில் இருந்த 2, 3 பெரிய வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. மன்னிக்கவும். எங்கள் வீடு என்றா சொன்னேன்... இல்லை இல்லை...
வீட்டுக்காரர் வீடு பெரியது. பெரிய வீடு என்ற வர்ணனை எங்கள் வீட்டுக்கு பொருந்தாது. ரோட்டைப் பார்த்தபடி இருக்கும் வீட்டின் பின்புறத்தில் அவுட் அவுஸ் போல ஒண்டுக்குடித்தன ஓட்டு வீடுகள் இருந்தன. அதில் ஒரு ஒண்டுக்குடித்தன வீட்டில் தான் நாங்கள் வாடகைக்கு குடி இருந்தோம். இந்த ஒன்டுக்குடித்தனங்களுக்கு என தனி வாசல். பெரிய வீட்டை ஒட்டிய சந்தின் வழி சென்று பின் புறமாக நுழைய வேண்டும். ஒரு சனிக்கிழமை காலை வீட்டில் என் நோட்டுப்புத்தகத்தில் எதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்.
"வந்துட்டாண்டா உன் பிரண்டு....போ...." அம்மா இப்படி அலறினால் கணேசன் வந்திருக்கிறான் என்று அர்த்தம்.
"போயி ஊர் சுத்தித் திரிஞ்சிட்டு விளக்கு வைக்கும் போது வா... வந்து பசிக்குதுன்னு மட்டும் கேட்ட...விளக்கு மாறு பிஞ்சிரும்"...
அம்மா எப்போதும் இப்படித்தான். என் நண்பர்களை பிடிக்கவே பிடிக்காது அவர்களுக்கு. டவுசர் மாத்திக்கொண்டு கிளம்பினேன்.
"டேய்.... டேய்... சாப்பிட்டு போடா..." குரலை உதாசீனம் செய்து வெளியே வந்தேன். கோனார் தமிழ் உரையை கையில் வைத்துக் கொண்டு கணேசன் நின்றிருந்தான்.
"இதை எதுக்குடா கொண்டு வந்த"
"அப்புறம் வீட்டுல இருந்து கிளம்ப எதாவது காரணம் சொல்ல வேணாம்? தமிழ் பரீட்சைக்கு படிக்க போறேன்னு சொல்லிட்டு வந்தேன்"
"சரி வா... காளிதாஸ் வீட்டுக்கு போலாம்"...
காளிதாஸ் - வீட்டுக்கு சொந்தக்காரர். பெரிய வீட்டுக்கு "மீரா பவனம்" என்று ஒரு பெயர் இருந்தாலும், நாங்கள் எப்போதும் காளிதாஸ் வீடு என்று தான் சொல்வோம்.
இரண்டு அறைகள் மட்டும் கொண்டிருந்த எங்கள் ஓட்டு வீடு, இந்தக் கதையில் அவ்வளவு முக்கியம் இல்லை. வீடுக்காரருடைய பெரிய வீடு தான், இக்கதையின் ஹீரோ. அதைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
"மீரா பவனம்" பெயருக்கேற்ற கம்பீரம் அதன் தோற்றத்திலும் இருக்கவே செய்தது. பெரிய காம்பவுண்டு சுவர்கள். தரையில் இருந்து 15 படிக்கட்டுகளில் வாசல். வெளி வாசலில் இரும்பில் க்ரில் கேட். படிக்கட்டின் இரு மருங்கிலும் பெயர் தெரியாத மரங்கள்..ஒரே மாதிரி தோற்றத்தில்...... வலது மூலையில் மட்டும் ஒரு ஒற்றைத் தென்னை மரம். இவை அனைத்தும் காம்பவுண்டுக்கு உள்ளேயே. படிகளுக்கு இரு புறமும் இருக்கும் வெளி தான் எங்கள் விளையாட்டுக்களம். வலது பக்க சாளரம் வழியே உள்ளிருந்து மரத்தடிக்கு வரும் எர்த்திங் கம்பியைத் தொட்டால் மெலிதாக, மிக மெலிதாக ஒரு ஷாக் உடம்பில் ஓடி பற்கள் கட கட கட வென ஆடும்... எங்களுக்கு பிடித்த விளையாட்டு.
"இன்னிக்கி என்ன வெளாட்டுடா வெளாடலாம்?"
"முதல்ல கொஞ்ச நேரம் இப்படி உக்காருவோம்.. அப்புறமா வெளாடலாம்."...
படிகளில் அமர்ந்தோம்... அப்போது தான் கவனித்தேன். நேற்று போட்ட லைட்டை அணைக்கவே இல்லை. வீட்டுக்காரர் தன குடும்பத்தோடு வேறு ஊரில் இருந்தார். அவர் பசங்களுக்கு விடுமுறை வந்தாலோ அல்லது வேறு எதாவது விசேஷம் என்றாலோ தான் இங்கே வருவார். அதுவரை பெரிய வீடு பூட்டித்தான் கிடக்கும். பெரிய பக்திமான் அவர். கடவுள் காரியங்களுக்கு அள்ளியும், மற்ற காரியம் என்றால் கிள்ளியும் கொடுக்கும் தயாளன். மாலை வேளைகளில் வீட்டில் விளக்கு எரியாவிட்டால் ஸ்ரீதேவி வீட்டை விட்டுப் போய் விடுவாள் என்பதாலும், எங்கள் வீட்டுக்காரருக்கு ஸ்ரீதேவியை வைத்துக் கொள்ள ஆசை இருந்ததாலும் வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும் தினசரி சாயங்காலம் பெரிய வீட்டு ஹாலில் லைட் போட்டு, காலையில் அணைத்து விடுவது வழக்கம் ஆயிற்று.
நீண்ட நாள் நண்பர் என்பதால், இந்த உதவியை (லைட் போட்டு அணைப்பது) தொடர்ந்து செய்து வருமாறு என் அப்பாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. லைட் ஸ்விட்ச் கைக்கு எட்டும் அளவுக்கு வளர்ந்ததும் அந்தப் பெரும் பொறுப்பு என் தலையில் விழுந்தது. காம்பவுண்ட் கேட், உள்ளே வாசல் கதவு இரண்டின் சாவிகளும் என்னிடம் இருக்கும்.
லைட்டை அனைத்து விட்டு வந்தேன். எதோ தீவிர யோசனையில் இருப்பவன் போல எங்கோ வெறித்துப் பார்த்த படி அமர்ந்து இருந்தான் கணேசன்.
"என்னடா யோசனை"
"ஒன்னும் இல்லடா... இந்த மல்லிகா அக்கா இல்ல.. அது உன்னை வீட்டுக்கு வரச் சொல்லுச்சி... சொல்ல மறந்துட்டேன்டா "..
"அடப்பாவி..." ஓங்கி நடு முதுகில் நச்சென்று ஒன்று வைத்தேன். அவனை உடனே வெளியே தள்ளி நானும் வெளியேறி கதவைப் பூட்டினேன்.... மானசீக ஸ்கூட்டரை உதைத்து மல்லிகா அக்கா வீட்டை அடைந்தேன்.
"பூ பறிக்கவா கூப்பிட்ட?"......
"ஆமா டா, சீக்கிரம் வா... அம்மா வெளில போயிருக்குது.. அது வர்றதுக்குள்ள பூ பறிச்சிட்டு வந்திருவோம், என்ன?"
"ம்....."
மறுபடியும் காளிதாஸ் வீடு.... அக்கம் பக்கம் பார்த்து விட்டு படாரென உள்ளே நுழைந்தோம்... உடனே கேட்டை இழுத்துப் பூட்டிவிட்டு, இடது பக்க மாற நிழலில் அமர்ந்தோம். மல்லிகா அக்கா அவசரப்படுத்தினாள்.
"டேய்.. சீக்கிரம் பூ பறிச்சிட்டு போலாம்டா..."
நெஞ்சு படபடக்க, கை காலெல்லாம் மெலிதாக நடுங்கத் தொடங்கி இருந்தது.... மல்லிகா அக்கா என் கையைப் பிடித்து அவள் சட்டைக்கு மேல், மார்பில் வைத்துக் கொண்டாள்.. ஆதரவாக அணைத்து காதுகளில் கிசுகிசுத்தாள்...
"பயப்படாதடா...."
சொல்லிக் கொண்டே தன் சட்டையை உயர்த்தி என் கையை உள்ளே ஒரு பக்க மார்புடன் சேர்த்து அழுத்திப் பிடித்து, கண்களை மூடிக் கொண்டாள்.
----- தொடரும்-------
Labels:
சிறுகதை
Friday, October 31, 2008
இரண்டு பிளாஷ்பேக்குகள் : பாகம் ஒன்று

பிளாஷ்பேக் ஒன்று:
அப்போது எனக்கு ஒரு 14 வயதிருக்கும். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். எங்களுடைய அன்றாட வாழ்விலிருந்து பிரிக்கவே முடியாத ஒரு இடமாக ரயில்வே ஸ்டேஷன் இருந்த காலம் அது. ஒரு நாளில் ஒரு முறையாவது ஸ்டேஷனுக்கு போகாமல் அந்த நாளின் இரவு வந்ததே இல்லை. சிகரெட் என்னுடைய உதடுகளின் ஸ்பரிசம் உணர்ந்ததும், பியரின் வாசத்தை என் நாசிகள் அறிந்ததும் இந்த ரயில்வே ஸ்டேஷனில்தான்.
அப்போது எனக்கு ஒரு 14 வயதிருக்கும். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். எங்களுடைய அன்றாட வாழ்விலிருந்து பிரிக்கவே முடியாத ஒரு இடமாக ரயில்வே ஸ்டேஷன் இருந்த காலம் அது. ஒரு நாளில் ஒரு முறையாவது ஸ்டேஷனுக்கு போகாமல் அந்த நாளின் இரவு வந்ததே இல்லை. சிகரெட் என்னுடைய உதடுகளின் ஸ்பரிசம் உணர்ந்ததும், பியரின் வாசத்தை என் நாசிகள் அறிந்ததும் இந்த ரயில்வே ஸ்டேஷனில்தான்.
பொதுவாக எங்களுக்கு அந்த இடம் வீட்டில் இருந்து தப்பிக்க ஒரு வசதியான காரணமாகவே முதலில் இருந்தது. படிக்கச்செல்வதாக கதை சொல்லிவிட்டு இங்கே ஓடி வந்து விடுவோம். என் நண்பர்களில் ஒருவனின் தந்தை ரயில்வேயில் வேலை பார்த்ததும் இன்னொரு முக்கியமான காரணம். எதாவது பிரச்சனை என்றால் உதவி கிடைக்கும் இல்லையா.
அப்படி தான் ஒரு நாள் பள்ளிகூடத்திலிருந்தே திட்டம் எல்லாம் பக்காவாக போடப்பட்டு மாலை சரியாக ஆறு மணிக்கு இரண்டாவது பிளாட்பார்மில் சந்திப்பதாக நண்பர் குழாமில் முடிவு ஆகியது. (எங்கள் ஊரின் ஸ்டேஷனில் மொத்தமே இரண்டு பிளாட்பாரம் தான் என்பது வேறு விஷயம்).
அன்றைக்கு பார்த்து எனது நாசமாய்ப் போன BSA SLR சைக்கிள் பங்ச்சர். அதற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீட்டிங்கை புறக்கணிக்க முடியுமா? எடுத்தேன் என் அப்பாவின் ராலே சைக்கிளை. கிளம்பினேன் புயல் வேகத்தில்.... (30 வருஷம் பழைய சைக்கிள் அது... எதாவது சின்ன டேமேஜ் என்றாலும் அடி பழுத்துவிடும்.. இருந்தாலும் நட்புக்கு முன் அதெல்லாம் தூசி ஆனது).
சரியாக 6 மணிக்கு நான் மட்டும் ஸ்டேஷனில். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். எந்த ஒரு முன்திட்டமிடப்பட்ட விஷயம் ஆனாலும் பேசியபடி நேரத்துக்கு சென்று சேருவது. (இப்போது என் மனைவியிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன்).
பிளாட்பாரம் முழுதும் காலியாக இருந்தது. பார்த்தவுடன் ஒரு குஷி. பரங்கி மலை ஜோதியில் முதல் டிக்கட் எடுத்து முதலில் உள்ளே சென்றது போல ஒரு குறுகுறுப்பு. பிளாட்பார்மில் எந்த வாகனத்தையும் ஓட்டக் கூடாது என்று தெரிந்தும் கிளப்பினேன் என் ராலேவை. சரியாக போலீஸ்காரனின் அருகில் சென்று நின்று போனது அந்த இரு சக்கர மூதேவி.
சைக்கிளை தனியாகவும் என்னைத் தனியாகவும் பிரிக்கும் போதே எனக்கு தெரிந்து விட்டது, இது பாகிஸ்தானின் சதி என்று. இருந்தும் மௌனம் காத்தேன். என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.
என் அப்பாவின் ராலே சைக்கிள், திருட்டு போய் பிடிபட்ட மற்ற சைக்கிள்களுடன் நிறுத்தப்பட்டது. நான் ஒரு ஓரமாக ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் பெஞ்சில். தடக் தடக் என்று நெஞ்சு அடித்துக்கொள்ளும் ஓசை எனக்கே கேட்கிறது. இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இறுக்கத்துடன் நான். போலீஸ்காரர்கள் பக்கத்தில் ஒருவனை போட்டு அடி பின்னி எடுக்கிறார்கள். வலி தாங்க முடியாமல் அவன் கதறும் ஒலி அடி வயிற்றை பிசைவதாக இருக்கிறது. அப்படியும் மிராசுதார் முகபாவத்தில் நான்.
இன்ஸ்பெக்டர் என்னை அழைத்ததும் ஜட்டியிலேயே ஒன்னுக்கு போயி விடும் உணர்வு ஏற்பட்டாலும், அதை அடக்கி அருகில் சென்றேன். "என்னடா, திமிரா? துரை, வெளில சைக்கிள பார்க் பண்ண மாட்டிங்களோ" என்றார். ஒன்றும் சொல்லத் தோணாமல் அமைதியாய் திரு திருவென விழித்த போது அவருக்கு பின்னால், எதிரே வாசலில் நண்பன். கைவிரலை கண்ணில் வைத்து எதோ சைகை காட்டுகிறான். முதலில் புரியவில்லை. நன்கு உத்து பார்த்ததும் புரிந்தது. "அழு... அழு.... அழுடா... கூ...." என்கிறான். ம்ஹூம்... எவ்வளவு முயற்சித்தும் எனக்கு அழுகை வரவில்லை.
இன்ஸ்பெக்டர் என்னை அழைத்ததும் ஜட்டியிலேயே ஒன்னுக்கு போயி விடும் உணர்வு ஏற்பட்டாலும், அதை அடக்கி அருகில் சென்றேன். "என்னடா, திமிரா? துரை, வெளில சைக்கிள பார்க் பண்ண மாட்டிங்களோ" என்றார். ஒன்றும் சொல்லத் தோணாமல் அமைதியாய் திரு திருவென விழித்த போது அவருக்கு பின்னால், எதிரே வாசலில் நண்பன். கைவிரலை கண்ணில் வைத்து எதோ சைகை காட்டுகிறான். முதலில் புரியவில்லை. நன்கு உத்து பார்த்ததும் புரிந்தது. "அழு... அழு.... அழுடா... கூ...." என்கிறான். ம்ஹூம்... எவ்வளவு முயற்சித்தும் எனக்கு அழுகை வரவில்லை.
கடைசியில் வெள்ளை பேப்பரில் கை எழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்கள். அதிகம் கெஞ்ச விடாமல், இரண்டு மணிநேரத்திலேயே சைக்கிளையும் திருப்பி கொடுத்து விட்டார்கள். இந்த வெள்ளை பேப்பர் மேட்டர் என்னை பல நாட்கள் தூங்க விடாமல் பண்ணியது ஒரு தனிக்கதை. எதாவது ஒரு கொலை கேசில் யாரும் மாட்டாவிட்டால், வெள்ளை பேப்பரில் கை எழுத்து போட்டு கொடுத்த என் போன்ற பாவாத்மாக்களை பிடித்துச் சென்று விடுவார்கள் என பரவலாய் நான் கேள்விப் பட்டிருந்தது தான் காரணம்.
இச்சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரம் கழித்து அதே இன்ஸ்பெக்டரை நான் சந்தித்தது மார்க்கெட்டில். என்னுடன் என் அப்பாவும். ஸ்டேஷனில் விதைகளை நசுக்கும் ஒலி எனக்கு அப்போதே மானசீகமாக கேட்டது. அதற்கு பின்பு நடந்து தான் கிளைமாக்ஸ். அவர் என் அப்பாவிடம் சொன்னார், "தம்பி உங்க பையன்னு தெரியாது சார், இல்லன்னா உடனே விட்டுருப்பேன்"
********************************************************************
Labels:
சிறுகதை
Subscribe to:
Posts (Atom)
