அவளா அது? என்னால் நம்பவே முடியவில்லை. கண்கள் இடுங்கி, உடல் இளைத்து, முடி எல்லாம் கொட்டிப் போய்..........
"நரை கூடிக் கிழப் பருவமெய்தி....." மேடையில் பாடி பரிசு வாங்கிய என் ரம்யாவா அவள்? பத்து வருட மண வாழ்க்கை ஒரு அழகியை இப்படியா சீர்குலைத்துவிடும்......................?
யோசித்துக் கொண்டே எதிரே வந்த ஐஸ் வண்டியைக் கவனிக்காமல்...... சட்...... "யோவ், பாத்து போய்யா, கூட்டமாப் பொண்ணுங்களப் பாத்தா உங்களுக்கெல்லாம் கண்ணு தெரியாதில்ல?"
அவனை அலட்சியப் படுத்திவிட்டு அவளை மீண்டும் பார்த்தேன். அட.... இங்கே தானே நின்று கொண்டிருந்தாள்? ஒரு வேளை அது அவள் இல்லையோ? ச்சே, ச்சே.... அது அவள் தான்.... என்ன தான் தோற்றம் மாறிவிட்டாலும் அந்த தெத்துப் பல் அது அவள் தான் என்று காட்டிக் கொடுத்ததே.... எங்கே போயிருப்பாள்.... ம்ஹூம்.....
"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" இடையில் இந்த செல் போன் சனியன் வேறு.... எடுத்தால் மறுமுனையில்..... ஐஸ்வர்யா ராய்..................!!!!"
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்... நெட்டி முறித்து நீண்ட பெருமூச்சை விட்டேன்.... கதை எழுதுவது இவ்வளவு கஷ்டமா.? செந்தில் கணேஷ் சொன்னது சரிதான்..... எனக்கெல்லாம் கதை எழுத வராது போலிருக்கிறது... மூக்கைத் துளைக்கும் வாசனையால் கவரப் பட்டு, கவனம் கலைந்தேன். எதிரே டேபிளின் மேல் சற்று முன் மாதவி வைத்து விட்டு போன மசால் வடை, ஆவி பறக்க சுண்டி இழுத்தது.
கதை எழுதிய பேப்பரை அப்படியே மடித்து வடையை சரியாக நடுவில் வைத்து மறுபடியும் ஒரு மடிப்பில் அப்படியே நசுக்கி, எடுத்து ஒரு விள்ளல் வாயில் போட்டு மென்று கொண்டே ஆவி பறக்கும் காப்பியை உறிஞ்சினேன். கூடவே ஒரு வில்ஸ் பில்டர் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் வீட்டில் சிகரெட் பற்ற வைத்தால் வேறு ஏதாவது பற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் அந்த நினைப்பை உடனே உதறினேன்.
வடை ஆசை முடிந்ததும், கதை ஆசை லேசாகத் தலை தூக்கியது. எழுதிப் பார்க்கலாமா? இது வரை எழுதிய பேப்பரை பார்த்தேன். அடடா, கதை போச்சே....
சரி வேறு ஒரு பேப்பரை எடுப்போம். யோசிக்கும் போதே உள்ளே இருந்து ஒரு குரல்..... "டேய் எவ்வளவு நேரமா கத்துறேன் - பால் வேணும், சக்கரை வேற தீந்து போச்சு, வாங்கிட்டு வானு? என்னடா பண்ணுற?" என் பிரிய சகியின் குரல் தான்... அன்பு மிகுந்தால் "டேய்"...
"அது ஒன்னும் இல்லம்மா, ஒரு கதை எழுதிப் பாக்கலாம்னு......"
"உன்னை நம்பி வந்த என்னோட கதையே இங்க சிரிப்பா சிரிக்குது.. இதுல நீ வேறயா? போடா.... போயி பால வாங்கிட்டு வா... வந்தா மத்தியானம் சாப்பாடு... இல்லன்ன்னா கொலப்பட்டினி போட்டுருவேன்..."
காப்பியை ஒரே உறிஞ்சலில் முடித்துவிட்டு சரேலென்று எழுந்தேன் - வடை மடித்த கதை பேப்பரை கசக்கிக் கொண்டே.....



